பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனிப்பட்ட விஜயமாக இன்று புதன்கிழமை சிங்கப்பூர் செல்கின்றார் எனப் பிரதமர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னர் நாட்டில் ஸ்திரமற்ற தன்மை நிலவுகின்றது. தாக்குதல்கள் குறித்து ஆராயும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் மூலம் வெளியாகும் அதிர்ச்சித் தகவல்கள், முஸ்லிம் தலைவர்களின் இராஜிநாமா, புதிய அமைச்சர்கள் நியமனம் என இலங்கையில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகின்றது.
இவ்வாறான நிலையிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தப் பயணத்தை மேற்கொள்கின்றார்.
சிங்கப்பூர் வைத்தியசாலையொன்றில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச சிகிச்சை பெற்று வருகின்றார். அவரின் சுகநலன்களை விசாரித்தல் மற்றும் சில தனிப்பட்ட விடயங்களுக்காகவே பிரதமர் சிங்கப்பூருக்குச் விஜயம் செய்கின்றார் என அலரி மாளிகைத் தகவல்கள் தெரிவித்தன.
பிரதமருடன் அவரது பாரியார் மைத்திரி விக்கிரமசிங்கவும் சிங்கப்பூர் செல்கின்றார்.
சிங்கப்பூரில் பிரதமர் மருத்துவ பரிசோதனை ஒன்றையும் மேற்கொள்ளவுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் 15ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பவுள்ளார்.